புத்தளம், கற்பிட்டி – பத்தலங்குண்டுவ கடற்பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகளை கடற்படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். இருப்பினும், இந்த நடவடிக்கையின்போது யாரும் கைது செய்யப்படவில்லை என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஐந்து பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில், 91 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 238 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள், கடற்படையினரின் தீவிர கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.