திரும்பத் திரும்ப ஏமாறும் தமிழர்கள் கண்டாவளை மருத்துவர் தொடக்கம் அர்ச்சுணா மருத்துவர் வரை

திரும்பத் திரும்ப ஏமாறும் தமிழர்கள் கண்டாவளை மருத்துவர் தொடக்கம் அர்ச்சுணா மருத்துவர் வரை

பலருக்கு நினைவிருக்கும், சில வருடங்களுக்கு முன்னர் இதேபோலத் தான் கண்டாவளையில் வேலை பார்த்த மருத்துவர், பிரியந்தினி என்பவர் , ஏதோ கண் அறுவை சிகிச்சையில் நடக்கும் தில்லாலங்கடி வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். நடக்கும் முறைகேடுகளை மக்கள் முன் வைக்கிறார் என்று பெரிய ஒரு கூட்டமே நம்பியது. ஆனால் கடைசியில் அவருக்கு என்ன நடந்தது என்பது ஊர் அறிந்த உண்மை. தன்னை ஊடகங்களிலும், சமூக வலையத் தளங்களிலும் பிரபல்யம் ஆக்கவே கண்டாவளை மருத்துவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது மட்டும் வெளிச்சத்திற்கு வரவில்லை. அவரிடம் உள்ள மருத்துவப் பட்டப் படிப்பு சான்றிதழிலேயே கோளாறு உள்ளது என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதுபோல தற்போது ஒருவர் கிளம்பி உள்ளார், அவர் வேறு யாரும் அல்ல மருத்துவர் அர்ச்சுணா என்ற நபர். மிக நன்றாகப் பேசத் தெரிந்த இவர் பேட்டி மேல் பேட்டி கொடுத்து வருகிறார்கள். யாழ் ஊடகங்களுக்கும் பல வருடங்களாக எந்த ஒரு தீனியும் கிடைக்கவில்லை. இதனால் இந்த உமியை வைத்து நன்றாக குத்தலாம் என்று கணக்குப் போட்ட யாழ் ஊடகங்கள், ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி இவரைப் பேட்டி எடுக்க. மருத்துவர் அர்ச்சுணா உளறிக் கொட்ட ஆரம்பித்தார். யாழில் நடந்த சில உண்மையான முறைகேடுகளை மருத்துவர் அர்ச்சுணா வெளிக்கொண்டு வந்தார். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் எல்லை மீறிய ஆசை அவரை கட்டி அணைத்துக் கொண்டது.

சந்தணம் மிஞ்சினால் அதனை எங்கே தடவுவார்களாம் ! அதுபோல தன்னை ஒரு பெரும் தலைவர் என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டு, தற்போது அவர் பிதற்ற ஆரம்பித்து விட்டார். இது வழமையாக இந்திய அரசியலில் தான் இருக்கும். ஆனால் இங்கே அர்ச்சுணாவுக்கு இது தொற்றிவிட்டது. தனது அப்பா, புலிகளின் நடேசனுக்கு அடுத்தபடியாக இருந்தார் என்று, நா கூசாமல் பொய் உரைக்கிறார். அப்படி அவரது அப்பா இருக்கவில்லை என்பது, தற்போது உயிருடன் இருக்கும் பல மூத்த தளபதிகளுக்குத் தெரியும். இன்னும் புலிகள் மறையவில்லை. அது போக அவரது அப்பா புலிகள் அமைப்பின் காவல் பிரிவில் இருந்துள்ளார். அதுவே உண்மை.

இது இவ்வாறு இருக்க விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர், ஒரு பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கற்பழித்து விட்டாராம். அதனை உடனே விசாரிக்கும் படி தனது அப்பாவுக்கு தலைவர் தனிப்பட்ட முறையில் கூறினாராம் என்று ஒரு வெடியை போட்டுள்ளார் மருத்துவர் அர்ச்சுணா. அப்பா அர்ச்சுணா போதுமடா சாமி, டெலி போன் வயர் அறுந்து போய் 2 வாரம் ஆகிறது. ஆனால் அதில் தலைவரோடு பேசினேன் என்று கூறுகிறாயே ? இதனை தமிழர்கள் பார்கிறார்கள் என்பது தான் மிகவும் வேதனையான விடையம். புலிகள் எந்த அளவு ஒழுக்கமானவர்கள் என்பதனை சிங்களவர் தொடக்கம் வெள்ளை இன மக்கள் வரை அறிவார்கள். அப்படியே இவர் சொல்வது போல ஒரு சம்பவம் நடந்திருந்தால் கூட, அதனை போட்டு அம்மான் அல்லது ரட்ணம் மாஸ்டர் பிரிவே விசாரணை செய்து இருக்கும்.

முதலில் யாழில் மருத்துவர்கள் ஒழுங்காக இயங்கவில்லை என்றார், ஏற்றுக் கொண்டேம். ஆனால் தற்போது கையில் எந்த ஒரு சரக்கும் இல்லை, எதனை பேசுவது என்று தெரியவில்லை. சொல்லவேண்டியது எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின்னர், ஏதாவது சொல்லவேண்டும் என்று இவர் கையில் எடுத்துள்ள விடையம் தான் விடுதலைப் புலிகள் பற்றி அவதூறு பரப்புவது. சிங்கள மக்களே அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில் தமிழர்களே இவரது பேட்டிகளை வலையத் தளத்தில் பார்த்து , ஏன் இவரை உசுப்பி விடுகிறீர்கள் ? ஏன் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறீர்கள் ? புரியவே இல்லை… போங்கள்..

அதிர்வுக்காக
கண்னன்