ஒரு வழக்கு இல்லை பல குற்றங்களின் கீழ் நமாலை கைது செய்து, அவரை நிலந்தரமாக உள்ளே அடைக்க அனுரா அரசு திட்டங்களை தீட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று, அதை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன அழைப்பாணையை விடுக்குமாறு உத்தரவிட்டார். குற்றப்பத்திரிகையில், ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று, அதை முறைகேடாக பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது.
இந்த வழக்கில், நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.