Posted in

குவைத் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்: மின்சாரம் மற்றும் குடிநீர் நிலையங்கள் பாதிப்பு!

குவைத் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்: மின்சாரம் மற்றும் குடிநீர் நிலையங்கள் பாதிப்பு! - Image 1

குவைத் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்: மின்சாரம் மற்றும் குடிநீர் நிலையங்கள் பாதிப்பு! - Image 1

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், குவைத் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஈரான் இன்று (ஏப்ரல் 5, 2026) அதிகாலை பயங்கர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குவைத்தின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் (Desalination Plants) கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால் நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இரண்டு மின் உற்பத்தி அலகுகள் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மின் நிலையங்கள் மட்டுமன்றி, குவைத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் எண்ணெய் வளத்துறையும் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. குவைத் சிட்டியில் உள்ள எண்ணெய் அமைச்சகம் மற்றும் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) தலைமையகம் அமைந்துள்ள ஷுவைக் (Shuwaikh) எண்ணெய் வளாகத்தின் மீது ட்ரோன்கள் மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதல்களில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குவைத்தின் அரசு அமைச்சகங்களின் வளாகமும் (Ministries Complex) ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நிதி அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் சிதைவடைந்துள்ளன. இதன் காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு (Remote Work) அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் வான் பாதுகாப்புப் படையினர் 19-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 9 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த போதிலும், சில இலக்குகளை ஈரான் தாக்கியுள்ளது குவைத் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் படைகள் குவைத் மண்ணைப் பயன்படுத்தித் தங்களைத் தாக்குவதாகக் குற்றம் சாட்டியே ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) போரின் ஆறாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் சிவில் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டமாகப் பார்க்கப்படுகிறது. குவைத் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இன்று ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன, இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மகா யுத்தத்தை நோக்கித் தள்ளியுள்ளது.

Leave a Reply