திரைத்துறையில் உச்சத்தை எட்டிய நடிகர் விஜய், அரசியலிலும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கினார். தனது அரசியல் வருகையின் தொடக்கமாக, பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்தல் மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தன் தொண்டர்கள் வாயிலாக உதவிகளைச் செய்தல் என மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
கடந்த ஆண்டு, தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அரசியலில் அடியெடுத்து வைத்தார். 2026 சட்டமன்றத் தேர்தலைத் தைரியமாக எதிர்கொள்ளுமாறு தனது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் நடித்துக்கொண்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, விஜய் முழுநேர அரசியல்வாதியாகவே மாறினார்.
வெற்றிகரமான மாநாடுகள், பிரச்சாரத் தொடக்கம்
படப்பிடிப்பு முடிந்ததும், பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
இரண்டு மாநாடுகளுக்குப் பிறகு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்த விஜய், திருச்சியில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து கடலூர், நாமக்கல், கரூர் எனப் பல மாவட்டங்களுக்குச் சென்று தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்தித்து, 2026-ல் உறுதியாக ஆட்சியை அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கரூரில் நடந்த எதிர்பாராத துயரம்
இந்த உற்சாகமான பயணத்தில், கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பொதுவெளியில் தலைகாட்டவே இல்லை. கட்சி நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட யாரும் வெளியே வரவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகுதான், விஜய் பேசிய வீடியோ ஒன்று வெளியானது.
ஆனாலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்ல கரூருக்குச் செல்ல அனுமதி கேட்டு, தவெக கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘தலைமறைவுக் கழகம்’ என்று மாறிய பெயர்
இந்தச் சம்பவத்தின் விளைவாக, ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) என்ற பெயரைச் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கேலி செய்யத் தொடங்கினர். ‘தலைமறைவு வாழ்க்கைக் கழகம்’ என்று பெயரை மாற்றிப் போஸ்டர்கள் ஒட்டியும், மீம்ஸ்கள் வெளியிட்டும் கடும் ட்ரோலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இது குறித்துப் பதிவு செய்துள்ளார். அதில், “சம்பவம் நடந்த அன்று கரூரிலோ அல்லது திருச்சியிலோ விஜய் தங்கிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாம். எங்களுக்கு அனுமதி தரவில்லை என்பதையும் அங்கிருந்தே ஊடகங்களில் தெளிவுபடுத்தியிருக்கலாம். இல்லையென்றால், சென்னை வந்ததும் வீடியோ காலிலாவது பேசியிருக்கலாம். அவர்கள் செய்த தாமதம், அதற்கான விலையைத் தந்துகொண்டிருக்கிறது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.