உக்ரைன் போர்முனையில் ரஷ்ய ட்ரோன்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், எதிரி ட்ரோன்களை நடுவானிலேயே செயலிழக்கச் செய்யும் அதிநவீன மின்னணு போர் கருவி ஒன்றை உக்ரைன் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘படேல்னியா’ (Patelnya) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம், அதன் அர்த்தத்திற்கேற்ப ஒரு சமையல் பாத்திரத்தைப் (Frying Pan) போலவே எதிரி ட்ரோன்களை ‘வறுத்து’ வீழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனிய நிறுவனமான ‘அன்வேவ்’ (Unwave) இந்த மின்னணு போர் (Electronic Warfare – EW) அமைப்பை உருவாக்கியுள்ளது. முதுகில் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘படேல்னியா’, 2K மற்றும் 3K என இரண்டு வகைகளில் வருகிறது. இது பல அதிர்வெண் பட்டைகளில் (frequency bands) 50 வாட்ஸ் மின்காந்த சமிக்கைகளை வெளியிடுகிறது. இதன் மூலம் எதிரி ட்ரோன்களுக்கு எதிராக 360 டிகிரி கோணத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையத்தை அல்லது கேடயத்தை உருவாக்குகிறது.
போர்க்களத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் தரைப்படை வீரர்களுக்காகவே இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. MOLLE-வகைப் பையுனுள் கச்சிதமாகப் பொருந்தும் இந்த அமைப்பு, கையால் கட்டுப்படுத்தக்கூடிய பிரிக்கக்கூடிய ஆண்டெனாவைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால், இதை தரையில் உள்ள முக்காலியில் (bipod) பொருத்தி நிலையான நிலையிலும் பயன்படுத்தலாம்.
ரஷ்ய ட்ரோன்களின் அச்சுறுத்தலில் இருந்து வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ‘படேல்னியா’ அமைப்பு, எதிரி ட்ரோன்களின் தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தல் சமிக்கைகளைத் துண்டித்து அவற்றை செயலிழக்கச் செய்கிறது. இதன் மூலம், எதிரி ட்ரோன்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியாமல், நடுவானிலேயே கீழே விழும் அல்லது திசை மாறும்.
உக்ரைனின் இந்த புதிய, தனித்துவமான மின்னணு போர் அமைப்பு, ரஷ்ய ட்ரோன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்றும், போர்க்களத்தில் தங்கள் படையினருக்கு இது ஒரு உயிர் காக்கும் கவசமாக இருக்கும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.