இரண்டு துருவங்கள் கடைசியில் ஒன்றாக இணைந்தது !

இரண்டு துருவங்கள் கடைசியில் ஒன்றாக இணைந்தது !

அம்பாறையில் அரசியல் திருப்பம்: பொத்துவிலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் மக்கள் நலன் கருதி ஒன்றிணைந்தனர்!

அம்பாறை, ஜூன் 27: அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில், நீண்டகாலமாக எதிரும் புதிருமாகச் செயற்பட்டு வந்த இரு முக்கிய அரசியல் துருவங்கள் வியாழக்கிழமை (ஜூன் 26) மக்கள் நலன் கருதி ஒன்றிணைந்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு, பிரதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் வாசித் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் ஆகியோரே இவ்வாறு கைகோர்த்துள்ளனர்.

இவர்களுக்கிடையிலான இந்த சிநேகபூர்வமான சந்திப்பு, வியாழக்கிழமை (ஜூன் 26) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் உலமாக்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.

இந்த இணைவின் பலனாக, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷர்ரப் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த காலங்களில் பொதுவாக இருதரப்பினரும் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாகச் செயற்பட்டு வந்த நிலையில், தற்போது மக்கள் நலன் கருதி ஒன்றிணைந்திருப்பது பொத்துவில் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைப்பு பிரதேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.