நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா தனது 42வது வயதில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகை ஷெஃபாலி உடல் நலனில் அக்கறை கொண்டவர். அவர் ஆரோக்கியத்துக்கு அதிகமாக கவனத்தை செலுத்தி வந்தார்.
2000வது ஆண்டில் பாலிவுட்டில் வெளிவந்த காந்தா லகா பாடல் மூலம் பிரபலமான ஷெபாலி பாலிவுட் ஸ்டார் நடிகர் அக்ஷய்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார்.
தொடர்ந்து நடிப்பிலும், மாடலிங்கிலும் இருந்த இவர், பராக் தியாகி என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி இரவு ஷெஃபாலி திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் வயதான தோற்றத்தை தடுத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும் மருந்துகளை 6 ஆண்டுகளாக ஷெஃபாலி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
அவர் இறந்த அன்று வீட்டில் பூஜை நடந்ததால் சாப்பிடாமல் விரதம் இருந்ததும், வெறும் வயிற்றில் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் மருந்தை எடுத்து கொண்டதாகவும் இதனால் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதேநேரம், ஷெஃபாலி நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டதால் மருந்து எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே உடற்கூராய்வு முடிந்து அவரது உடல் மும்பையில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. எனினும், ஷெஃபாலியின் மரணத்துக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.