காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்

காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நாகேஷ். ஆரம்ப காலத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை செய்து வந்த நாகேஷ், நாடகத்துறையில் மீது உள்ள ஆர்வத்தால் நடிகரானார்.

அப்போது, பிரபல காமெடியனாக இருந்த சந்திரபாபுக்குப் போட்டியாகவும் அதேசமயம், தனது தனித்தன்மையுடன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திறமைக்கேற்ப பிரபல பட அதிபர்கள் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களில் காமெடி நடிகராக நடிக்க வைத்தனர்.

இதனைத்தொடந்து நாகேஷ், தனது தனித்த உடல்மொழி,பேச்சு பாணி, நகைச்சுவை, இயல்பான நடிப்பு என மக்கள் மத்தியில் பிரபலமானார். நீர்க்குமிழி , சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

சினிமாவில் 600 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்த நடிகர் நாகேஷ், கடந்த 2009 ஆம் ஆண்டு காலமானார்.

இந்த நிலையில், நடிகர் நாகேஷின் நினைவு தினம் இன்று. அவரது நினைவுதினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் தன் வலைதள பக்கத்தில்,

‘நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை.

கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.