இனி படங்கள் இயக்குவதில் மட்டும் கவனம்… இயக்குனர் சேரன்

இனி படங்கள் இயக்குவதில் மட்டும் கவனம்… இயக்குனர் சேரன்

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவர் இப்போது ’ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி, சரத்குமார், பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி லிவ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. ஒரு மாபெரும் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கைப் பின்னணி குறித்த விறுவிறுப்பான தொடராக ஜர்னி உருவாகியுள்ள நிலையில் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்க தொடங்கியுள்ளது.

இந்த வெப் தொடரின் வெற்றி குறித்து பேசியுள்ள சேரன் “வெப் தொடர்களில் கதைகளை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்ல முடிகிறது. இந்த வெற்றி எனக்கு புதிய அனுபவங்களைக் கொடுத்துள்ளது. இனிமேல் படங்கள் இயக்குவதில் அதிக கவனம் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.