இந்த ஆண்டில் கடந்த ஏழு மாதங்களில், நாடு முழுவதும் 68 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காவல்துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கி வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நேற்று நடைபெற்ற பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர், இந்த தகவல்களை வெளியிட்டார்.
2025 ஜனவரி 1 முதல் ஜூலை 14 வரையிலான காலப்பகுதியில் 68 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 50 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவை. மீதமுள்ள 18 சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளன.
இந்த 68 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் காயமடைந்துள்ளனர், இவர்களில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின்போது, பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
காவல்துறையினர் நடத்திய சோதனைகளில், 23 T56 ரக துப்பாக்கிகள், 46 கைத்துப்பாக்கிகள் மற்றும் 1,165 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
68 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக, துப்பாக்கிச்சூடு நடத்திய 24 பேர், ஓட்டுநர்களாகச் செயல்பட்ட 15 பேர் மற்றும் இவர்களுக்கு ஆதரவளித்த 150 பேர் என மொத்தம் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள், நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பொதுமக்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைகள், துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.