ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் ஜூன் 11 முதல் 13 வரை ஜேர்மன் சமஷ்டிக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க அவர்கள் ஜேர்மனியின் ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார். அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் குறித்து இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்படும்.
மேலும், ஜேர்மனியின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தால் (DஈHK) ஏற்பாடு செய்யப்படும் ஒரு வணிக மன்றத்திற்கு ஜனாதிபதி திஸாநாயக்க தலைமை தாங்குவார். இந்த மன்றத்தில் ஜேர்மனியின் முக்கிய தொழிற்துறையினருடன் கலந்துரையாடி, இலங்கையின் பொருளாதார மாற்றம், கிடைக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை அவர் எடுத்துரைப்பார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் துறை சங்கங்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.