இஸ்ரேல் ஈரானை தாக்கியதைத் தொடர்ந்து, உலக எண்ணெய் விலையில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்களை வியத்தகு முறையில் அதிகரித்ததுடன், உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது. இது ஜனவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் எண்ணெய் விலை உச்சம் தொட்ட சந்தர்ப்பமாகும். வெள்ளிக்கிழமை 0315 GMT மணியளவில், பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 6.29 அமெரிக்க டொலர்கள் அல்லது 9.07% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $75.65 ஆகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் விலை 6.43 அமெரிக்க டொலர்கள் அல்லது 9.45% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $74.47 ஆகவும் இருந்தது.
தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கையாக இருக்கும் என்று எச்சரித்ததன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை ஈரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கை புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், எண்ணெய் சந்தை எந்தவொரு சாத்தியமான விநியோக இடையூறுகளுக்கும் அதிக ஆபத்து பிரீமியத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சிங்கப்பூரில் உள்ள பல எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஏனெனில் இது ஈரான் எவ்வாறு பதிலடி கொடுக்கும் மற்றும் அமெரிக்கா தலையிடுமா என்பதைப் பொறுத்தது. வெள்ளிக்கிழமை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை “கடுமையாக்கும்” என எதிர்பார்க்கப்படுகிறது, இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.