பங்களாதேஷின் முன்னாள் நிலத்துறை அமைச்சர் சைபுஸ்ஸமான் சௌத்ரிக்கு சொந்தமான பிரிட்டனில் உள்ள சொத்துக்களை ஐக்கிய ராஜ்யத்தின் தேசிய குற்றவியல் ஏஜென்சி (NCA) முடக்கியுள்ளது. அல் ஜசீராவின் புலனாய்வுப் பிரிவு (I-Unit) இதனை வெளிப்படுத்தியுள்ளது. பணமோசடி தொடர்பாக பங்களாதேஷ் அதிகாரிகளால் சௌத்ரி விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சொத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பங்களாதேஷ் அதிகாரிகள் விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. NCA செய்தித் தொடர்பாளர் ஒருவர், “தொடர்ந்து நடைபெற்று வரும் சிவில் விசாரணையின் ஒரு பகுதியாக பல சொத்துக்களுக்கு எதிராக முடக்குதல் உத்தரவுகளை NCA பெற்றுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த சொத்து முடக்கம் சௌத்ரி தனது சொத்துக்களை விற்க முடியாது என்பதைக் குறிக்கிறது.
“பிரிட்டனின் FBI” என்று அழைக்கப்படும் இந்த பொலிஸ் ஏஜென்சியின் நடவடிக்கை, பங்களாதேஷின் இடைக்கால தலைவர் பேராசிரியர் முஹம்மது யூனுஸ் லண்டனுக்கு விஜயம் செய்த இந்த வாரத்துடன் ஒத்துப்போகிறது. கடந்த ஆண்டு, அல் ஜசீரா, சௌத்ரிக்கு பிரிட்டனில் 350-க்கும் மேற்பட்ட சொத்துகள் இருப்பதாக வெளிப்படுத்தியது. NCA-வின் இந்த நடவடிக்கையின் முழு வீச்சு இன்னும் அறியப்படாத நிலையில், லண்டனின் செயின்ட் ஜான்ஸ் வுட்டில் உள்ள சௌத்ரியின் ஆடம்பர வீடு இந்த சொத்து முடக்க நடவடிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை I-Unit வெளிப்படுத்தியுள்ளது. £11 மில்லியன் ($14.8 மில்லியன்) க்கு வாங்கப்பட்ட இந்த வீடு, சௌத்ரி அமைச்சராக இருந்த காலத்தில் குவித்த செல்வத்தைப் பற்றிய நீண்டகால விசாரணைக்காக அல் ஜசீரா I-யூனிட்டின் இரகசிய நிருபர்களால் படமாக்கப்பட்ட இடமாகும்.
இந்த சந்திப்பின் போது, சௌத்ரி தனது உலகளாவிய சொத்துகள் மற்றும் விலையுயர்ந்த ஆடம்பர உடைகள், “பேபி க்ரோக்” லெதர் ஷூக்கள் மீதான தனது ஆர்வம் குறித்து நிருபர்களிடம் வெளிப்படையாகப் பேசினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவுடன் தான் நெருங்கிய உறவு கொண்டவர் என்றும், “நான் உண்மையில் அவரது மகன் போன்றவன்” என்றும் கூறினார். சிட்டகாங் துறைமுக நகரத்தின் சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த சௌத்ரி, பங்களாதேஷ் நாணய சட்டங்களின்படி ஒரு குடிமகன் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆண்டு வரம்பு $12,000 ஆக இருந்தபோதிலும், $500 மில்லியனுக்கும் அதிகமாக லண்டன், துபாய் மற்றும் நியூயார்க்கில் ரியல் எஸ்டேட்டில் செலவழித்ததாக I-Unit வெளிப்படுத்தியது, ஆனால் இந்த வெளிநாட்டு சொத்துக்களை தனது பங்களாதேஷ் வரி வருமானத்தில் அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.