இம்ரான் கான் விடுதலை? பக்ரீத் பண்டிகையில் வெடிக்கும் அரசியல் புயல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் திடீரென அறிவித்துள்ளார். 72 வயதான இம்ரான் கான், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த மாத தொடக்கத்திலேயே, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.-என்) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, சிறையில் இருந்தபடியே போராட்டத்திற்கு தலைமை தாங்கப் போவதாக இம்ரான் கான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இம்ரான் கானை விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் அலி அமீன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த விடுதலை அறிவிப்பு, பக்ரீத் பண்டிகையை ஒட்டி அரசியல் அரங்கில் ஒரு பெரிய புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான் கானின் விடுதலை குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த செய்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், எதிர்ப்பாளர்கள் மத்தியில் புதிய பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பி.டி.ஐ.யின் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், இம்ரான் கானின் விடுதலை பாகிஸ்தான் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.