ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் கபே லேம் (Khaby Lame), அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ், ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம், ஏப்ரல் 30 அன்று அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் தனது விசா காலத்தை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. விசா விதிமுறைகளை மீறியதாலேயே சுங்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிறகு, அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவதாக காபி லேம் உறுதியளித்ததை அடுத்து, அதிகாரிகள் அவரை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காபி லேம் கைது செய்யப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவி, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது திடீர் கைது மற்றும் அமெரிக்காவை விட்டு வெளியேற்றம் குறித்த செய்திகள், இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.
கபே லேம் ஒரு வயதாக இருக்கும்போது அவரது குடும்பத்தினர் இத்தாலிக்குக் குடிபெயர்ந்ததால், அவர் இத்தாலி நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். தனது பதின்ம வயதில் ஒரு தொழிற்சாலையில் CNC இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்த அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு டிக்டாக்கில் வேடிக்கையான, வார்த்தைகளற்ற காணொளிகளைப் பதிவிட ஆரம்பித்து, உலக அளவில் பெரும் புகழ் பெற்றார். அவரது இந்த பிரபலம், சட்ட சிக்கல்களிலும் அவரைச் சிக்க வைத்துள்ளது.