பல மாதங்களாக நீடித்த அரசியல் கொந்தளிப்பு மற்றும் இராணுவச் சட்ட நெருக்கடிக்குப் பின்னர், தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் (Lee Jae-myung) அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தென் கொரியாவின் புதிய தாராளவாத ஜனாதிபதி லீ ஜே-மியுங் புதன்கிழமை (ஜூன் 4) தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். இராணுவச் சட்டத்தின் கொந்தளிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதாகவும், வளர்ச்சி மந்தநிலை மற்றும் உலகளாவிய பாதுகாப்புவாத அச்சுறுத்தலால் தத்தளிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகவும் அவர் சபதம் செய்தார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திடீர்த் தேர்தலில் லீயின் தீர்க்கமான வெற்றி, ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். தேசிய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, 100% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பதிவான கிட்டத்தட்ட 35 மில்லியன் வாக்குகளில் லீ 49.42% வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் பழமைவாத போட்டியாளரான கிம் மூன்-சூ 41.15% வாக்குகளைப் பெற்றார். இது 1997க்குப் பின்னர் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகபட்ச வாக்குப்பதிவைக் கொண்டு வந்தது.
61 வயதான முன்னாள் மனித உரிமை சட்டத்தரணியான லீ, செவ்வாய்க்கிழமை தேர்தலை, யூனின் இராணுவச் சட்டம் மற்றும் அவரது மக்கள் சக்தி கட்சி இந்த துரதிர்ஷ்டவசமான நடவடிக்கையைத் தடுக்கத் தவறியதற்கு எதிரான “தீர்ப்பு நாள்” என்று அழைத்தார். தேர்தல் வெற்றியின் பின்னர் புதன்கிழமை (ஜூன் 4) தேசிய தேர்தல் ஆணையத்தால் லீ அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். உடனடியாக ஜனாதிபதி மற்றும் தளபதியின் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டார். பதவியேற்ற முதல் நாளிலேயே, நாடு எதிர்கொள்ளும் அவசர பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதாக லீ உறுதியளித்துள்ளார். நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவுக் கவலைகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களின் போராட்டங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் உறுதிபடுத்தினார். தற்சமயம், நாடுகளுக்கு இடையேயான பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுக்கு வொஷிங்டன் குற்றம் சாட்டிய இறக்குமதி வரிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெள்ளை மாளிகை நிர்ணயித்த காலக்கெடுவையும் அவர் எதிர்கொள்கிறார்.
இராணுவச் சட்ட முயற்சியால் ஆழமாக பாதிக்கப்பட்ட ஒரு நாட்டை மீட்பது முதல், ஒரு முக்கிய வர்த்தக பங்காளியும் பாதுகாப்பு கூட்டாளியுமான அமெரிக்காவின் கணிக்க முடியாத பாதுகாப்புவாத நடவடிக்கைகளைச் சமாளிப்பது வரை, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் ஒரு தென் கொரியத் தலைவருக்கு மிகவும் கடினமான சவால்களை லீ எதிர்கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி யூன் டிசம்பரில் குறுகிய கால இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியபோது, எதிர்க்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சட்டமன்றத்தை இராணுவப் படையால் கைப்பற்ற முயன்றபோது தென் கொரியாவின் அரசியல் கொந்தளிப்பு தொடங்கியது. பின்னர் அவர் சட்டமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் முறையாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது செவ்வாய்க்கிழமை தேர்தலுக்கு வழிவகுத்தது. யூனின் பதவி நீக்கத்திலிருந்து தென் கொரியா தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படாத தற்காலிக ஜனாதிபதிகளால் வழிநடத்தப்பட்டு வந்தது. மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது நாட்டை நிலைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும், ஆனால், இந்த வெற்றி நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்கவும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருபெரும் சக்திகளுக்கு இடையே இராஜதந்திர சமநிலையை பேணவும் புதிய ஜனாதிபதிக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.