மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த மோதல்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த வான்பரப்பு, தற்போது ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளால் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் இஸ்ரேலுக்கு அண்டை நாடுகள் என்பதால், அப்பகுதிகளில் நிலவிய போர் பதற்றத்தால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஜோர்டான் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஹைதாம் மிஸ்டோ, “ஜோர்டான் தனது வான்பரப்பை சனிக்கிழமை காலை 7:30 மணி (0430 GMT) முதல் மீண்டும் திறந்துள்ளது” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதேபோல், லெபனான் போக்குவரத்து அமைச்சர் ஃபாயெஸ் ரஸ்ஸாம்னி சனிக்கிழமை காலை 10:00 மணி (0700 GMT) முதல் நாட்டின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்தார். சிரியாவிலும், விமானப் போக்குவரத்து ஆணையம் சிவில் விமானப் போக்குவரத்திற்காக நாட்டின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்தது.
இந்த மூன்று நாடுகளுக்கும் இஸ்ரேலுடனான உறவுகள் வேறுபட்டவை. ஜோர்டான் இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. சிரியா நீண்டகாலமாக ஈரானின் கூட்டாளியான பஷர் அல்-அசாத்தால் ஆளப்பட்டு வந்தது, ஆனால் கடந்த 2024 டிசம்பரில் அவர் வெளியேற்றப்பட்டதிலிருந்து இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சியாளர்களால் தலைமை தாங்கப்படுகிறது. லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா என்ற போராளிக் குழு உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலுடன் நடந்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலிருந்து, ஹெஸ்பொல்லா தனது ஆயுதங்களை ஒப்படைத்து இஸ்ரேலிய எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் ஒரு போர்நிறுத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடி மோதலுக்குப் பிறகு, இந்தப் பிராந்திய நாடுகள் வான்பரப்பை மூடியது, அப்பகுதியில் நிலவிய உச்சக்கட்ட பதற்றத்தை வெளிப்படுத்தியது. தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டிருப்பது, உடனடி போர் பதற்றம் தணிந்து வருவதற்கான ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இது பிராந்தியத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கும், விமானப் பயணங்கள் வழமைக்கு வருவதற்கும் வழிவகுக்கும். உலக நாடுகள் மத்திய கிழக்கின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை ஒரு நம்பிக்கையான செய்தியாக அமைந்துள்ளது.