இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்களான இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மேற்குக் கரையில் தொடர்ந்து வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நார்வே ஆகிய ஐந்து நாடுகள் செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளன. இந்தத் தடைகளில் சொத்துகளை முடக்குதல் மற்றும் பயணத் தடைகள் ஆகியவை அடங்கும். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரும் மேற்குக் கரை குடியேற்றவாசிகளாவர். ஐந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, பென்-க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோர் “தீவிரவாத வன்முறை மற்றும் பாலஸ்தீனிய மனித உரிமைகளை கடுமையாக மீறியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் ஏற்கத்தக்கவை அல்ல” என்று கூறினார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா கண்டிப்பதாகக் கூறி, தனது நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனுடன் ஒரு அரிய பிளவை வெளிப்படுத்தினார். காசா போர்நிறுத்தம், போரை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளை மீட்டெடுப்பதற்கான அமெரிக்க தலைமையிலான முயற்சிகளை இந்த நடவடிக்கை ஒருபோதும் முன்னெடுத்துச் செல்லாது என்றும், “ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு… உண்மையான எதிரி யார் என்பதை எங்கள் கூட்டாளர்கள் மறக்க வேண்டாம்” என்றும் ரூபியோ கூறினார். இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார், இந்த நடவடிக்கை “திடுக்கிடும்” என்றும், இஸ்ரேலிய அரசாங்கம் அடுத்த வார தொடக்கத்தில் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி பதிலடி கொடுப்பது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். அதேசமயம், மேற்குக் கரை யூதக் குடியேற்றப் பகுதி ஒன்றின் தொடக்க விழாவில் பேசிய ஸ்மோட்ரிச், பிரிட்டனின் நடவடிக்கையை “அவமதிப்பதாக”க் கருதினார்.
இந்தத் தடைகள் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும், இஸ்ரேலின் சொந்த பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தனிநபர்களை மட்டுமே குறிவைக்கின்றன என்றும் கூட்டு அறிக்கை கூறியது. இருப்பினும், காசாவில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து இந்த நடவடிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், பொதுமக்கள் படும் துயரங்கள், குறிப்பாக அத்தியாவசிய உதவிகள் மறுக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தன. காசாவிலிருந்து அல்லது மேற்குக் கரைக்குள் பாலஸ்தீனியர்களை சட்டவிரோதமாக வெளியேற்றக்கூடாது என்றும், காசா பகுதியின் பரப்பளவு குறைக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டன. ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை உடனடியாக விடுவித்தல், காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் இரு-அரசு தீர்வுக்கு வழிவகுத்தல் ஆகியவற்றிற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் ஐந்து நாடுகள் உறுதிபூண்டன.