கிரிமியா: ட்ரோன் தாக்குதல்கள் மூலம் ரஷ்யாவின் அணுசக்தி குண்டுவீச்சு விமானப் படையை தாக்கிய 2 தினங்களில் இன்று(03) உக்ரைன் கெர்ச் பாலத்தின் மீது துணிச்சலான நீருக்கடி தாக்குதல் நடத்தி, அதனை “பழுதுபார்க்க முடியாத நிலைக்கு” தள்ளியுள்ளது. உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவை, கிரிமியா தீபகற்பத்திற்கான இந்தப் பாலத்தை நீருக்கடி வெடிபொருட்களால் தாக்கியதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கிரீமியா என்ற உக்ரைன் மாநிலத்தை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றி தனது இடமாக அறிவித்து. ஒரு பெரும் பாலத்தை கட்டி, அதனூடாக ராணுவத்தை அனுப்பி அங்கே பெரும் படை ஒன்றை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது பாலம் தகர்க்கப்பட்டதால் , நிலைகொண்டுள்ள ரஷ்ய ராணுவத்தினருக்கான சப்பிளை தடைப்பட்டு அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்.
SBU டெலிகிராம் செயலியில் வெளியிட்ட அறிக்கையில், 1,100 கிலோகிராம் வெடிபொருட்களைப் பயன்படுத்தி அதிகாலையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. இதனால் 12 மைல் நீளமுள்ள பாலத்தின் நீருக்கடித் தூண்கள் சேதமடைந்துள்ளன. இந்த பாலம், உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளுக்கு ஒரு முக்கிய விநியோகப் பாதையாகும். வெடிவிபத்தைத் தொடர்ந்து பாலத்தின் மீது புகை மண்டலம் சூழ்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
SBU தலைவர், லெப்டினன்ட் ஜெனரல் வசில் மால்யுக் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கிரிமியன் பாலத்தை இரண்டு முறை தாக்கியுள்ளோம். எனவே இன்று நாங்கள் இந்த பாரம்பரியத்தை நீருக்கடியில் தொடர்ந்தோம். எங்கள் நாட்டின் பிரதேசத்தில் எந்த சட்டவிரோத ரஷ்ய வசதிகளுக்கும் இடமில்லை. எனவே, கிரிமியன் பாலம் முற்றிலும் சட்டபூர்வமான இலக்காகும், குறிப்பாக எதிரி அதை தனது படைகளுக்குப் பொருட்களை அனுப்ப ஒரு தளவாட வழியாகப் பயன்படுத்தினார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கிரிமியா உக்ரைனுக்கு சொந்தமானது, ஆக்கிரமிப்பின் எந்தவொரு வெளிப்பாட்டிற்கும் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம்,” என்று வசில் மால்யுக் குறிப்பிட்டார்.
உக்ரைனிய செய்தி நிறுவனமான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின்படி, ரஷ்யப் படைகள் இன்று காலை பாலத்தை தற்காலிகமாக மூடிவிட்டன. இந்தத் தாக்குதலில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.