Posted in

நைஸாக பேசி வேளாங்கண்ணிக்கு கூட்டிவந்து வாளால் வெட்டிய பெண் வீட்டார் !

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட இளஞ்ஜோடிகளின் விடயம் தொடர்பாக மணமகனின் குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் – கலையரசி தம்பதியரின் மகன் ராகுல் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவின் மகள் கீர்த்தனா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கீர்த்தனாவின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்த இந்த ஜோடி, குடும்ப எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து, ராகுல் தனது பெற்றோரின் ஆதரவுடன் கீர்த்தனாவை அழைத்து வந்து, கடந்த புதன்கிழமை வேளாங்கண்ணியில் மதம் மாறித் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதியினர் ராகுலின் பெற்றோருடன் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்தத் தகவலை அறிந்த கீர்த்தனாவின் குடும்பத்தினர், ஆரம்பத்தில் திருமணத்தை ஏற்றுக்கொள்வது போலப் பேசி, தம்பதியினர் தங்கியிருந்த விடுதி முகவரியை நைசாகக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இதுவே அடுத்து நடந்த கோர சம்பவத்திற்கு வழி வகுத்தது.

பெங்களூரில் இருந்து கார்கள் மூலம் சுமார் 15 பேர் கொண்ட கீர்த்தனாவின் குடும்பத்தினர் கொண்ட ஒரு கும்பல், வேளாங்கண்ணிக்கு விரைந்து வந்துள்ளது. அவர்கள் ராகுல் குடும்பத்தினர் தங்கியிருந்த விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இந்தக் கும்பல் புதுமணப்பெண் கீர்த்தனாவை பலவந்தமாகக் கடத்திச் செல்ல முயன்றபோது, அதனைத் தடுக்க முயன்ற ராகுல், அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி மற்றும் மாமா பிரகாஷ் ஆகியோர் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி போலீசார், பலத்த வெட்டுக் காயமடைந்த நால்வரையும் உடனடியாக நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வேளாங்கண்ணி காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட கீர்த்தனாவின் குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரை விரைந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.