பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவான டாக்டர் நாலின்ட ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நட்புறவு சங்கத்தின் புத்துயிர் கூட்டம் பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் அனுசரணையில் 2025 மே 08 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கௌரவ விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கவிந்த ஜயவர்தன இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின்போது, இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான ஆழமான மற்றும் நீடித்த உறவை எடுத்துரைத்தனர். பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மிகவும் சவாலான காலங்களில் இந்தியா அளித்த நிலையான ஆதரவுக்கு சபாநாயகர் பாராட்டு தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்புக்கு புதிய வழிகளைத் திறந்த ஒரு முக்கிய மைல்கல்லாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய அரசு முறைப் பயணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாத இறுதியில் இந்திய பாராளுமன்ற ஆய்வுகள் மற்றும் பயிற்சிப் பணியகம் நடத்தவுள்ள இலங்கையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவிருக்கும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிகரமான இலங்கை விஜயத்தை நினைவு கூர்ந்ததுடன், நெருங்கிய மற்றும் நம்பகமான அயல்நாடு என்ற வகையில் பல துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் நாலின்ட ஜயதிஸ்ஸ தனது உரையில், இரு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான பாலமாக நட்புறவு சங்கத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏற்கனவே வலுவான உறவுகளை ஆழப்படுத்த அர்த்தமுள்ள ஈடுபாட்டை வளர்ப்பதில் நம்பிக்கை தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி உரையை வழங்கிய நட்புறவு சங்கத்தின் செயலாளர் டாக்டர் கவிந்த ஜயவர்தன, இந்தியாவின் நீடித்த நட்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.