அப்ப விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா… ஒரு படத்தின் உண்மையான வெற்றி இதுதான் – எஸ் ஏ சி பேச்சு!

அப்ப விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா… ஒரு படத்தின் உண்மையான வெற்றி இதுதான் – எஸ் ஏ சி பேச்சு!

விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.

இப்போது அவர் விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இயக்குனர் எழில் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அவர் இயக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக விழாவில் பல முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அப்போது விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “விஜய்யின் கேரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று துள்ளாத மனமும் துள்ளும். அந்த படத்தின் கதையைக் கேட்டதும் உடனே விஜய் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அந்தளவுக்கு திரைக்கதை என்னை ஈர்த்தது. அப்போது விஜய் என்ன சூப்பர் ஸ்டார் நடிகரா? அந்த படத்தில் விஜய் இல்லாமல் யார் நடித்திருந்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். அதுதான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி” என பேசியுள்ளார்.