செத்தா இப்படி சாகணும்! அவர் நினைச்ச மாதிரியே நடந்திருச்சு – கேப்டன் பற்றி ஃபீல் பண்ணும் தயாரிப்பாளர்

செத்தா இப்படி சாகணும்! அவர் நினைச்ச மாதிரியே நடந்திருச்சு – கேப்டன் பற்றி ஃபீல் பண்ணும் தயாரிப்பாளர்

இன்று விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தன் உறவினர்களுடன் அவருடைய சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். பிரேமலதா கண்ணீர் மல்க அவர் சமாதி முன்பு நின்றுகொண்டு மனம் உருகி பூஜை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயகாந்த் ஒரு நடிகராக அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது என்று சொல்வார்கள்.

ஆனால் விஜயகாந்த் எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் உயர்ந்த விஜயகாந்த் அரசியல்வாதியாக எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த போதிலும் தான் கொண்ட கொள்கையில் என்றைக்கும் மாறாதவராகத்தான் இருந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே அவர் இறுதி காலம் வரை மற்றவரின் நலனுக்காகவேதான் இருந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவர் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது இப்படி ஒரு மனிதரை இழந்து விட்டோமே என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

இன்னும் சிலர் ‘இவரை ஏன் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்கவில்லை?’ என்று புலம்புவதையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர் சிவா விஜயகாந்தை பற்றி இதுவரை சொல்லாத ஒரு ரகசியத்தை கூறியிருக்கிறார்.

தீவிர எம்ஜிஆர் ரசிகரான விஜயகாந்த் எம்ஜிஆர் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வேதனையில் இருந்தாராம். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் வரும் போது எம்ஜிஆரின் உடலை பார்க்க ஏராளமான மக்கள் ஓடுவதை விஜயகாந்த் பார்த்து ‘செத்தா இப்படி சாகனும்யா’ என்று சொன்னாராம்.

இதை குறிப்பிட்டு பேசிய தயாரிப்பாளர் சிவா விஜயகாந்திற்காக மக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அன்று அவர் சொன்ன அந்த வார்த்தைதான் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றும் நினைத்ததை போலவே செய்து காட்டியிருக்கிறார் விஜயகாந்த் என்றும் சிவா கூறினார்.