அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா இல்லையா? முன்னணி தமிழ் நடிகையிடம் பேச்சுவார்த்தை!

அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா இல்லையா? முன்னணி தமிழ் நடிகையிடம் பேச்சுவார்த்தை!

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் கூறியுள்ளார். இந்த படத்தைப் பற்றி பாலிவுட் பிரபலங்களான ஜாவேத் அக்தர் மற்றும் கங்கனா ரனாவத் போன்றவர்களும் எதிர்மறை விமர்சனங்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என பல நேர்காணல்களில் சந்தீப் மற்றும் ரன்பிர் கபூர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்தின் திரைக்கதை பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ராஷ்மிகா இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.