நான் பேசியது பப்ளிசிட்டிக்கா என அப்பாவிடம் கேட்கிறார்கள்…

நான் பேசியது பப்ளிசிட்டிக்கா என அப்பாவிடம் கேட்கிறார்கள்…

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய லால் சலாம் படத்தின் இயக்குனரும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி “என் அப்பாவை சங்கி என விமர்சிக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரை தவிர தைரியமாக யாருமே நடித்திருக்க முடியாது. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த படம் உங்களைப் பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் கண்டிப்பாக சங்கி இல்லை” எனக் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்த நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் “ஐஸ்வர்யாவின் பேச்சு படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பேசப்பட்டதா” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினி இதுகுறித்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது பேச்சில் “நான் ஆடியோ வெளியீட்டில் என்ன பேசப் போகிறேன் என்பது அப்பாவுக்கு தெரியாது. நான் அதிகமாக பேசமாட்டேன் என அவர் நினைத்தார். ஆனால் நான் அவருக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டேன். என் பேச்சு லால் சலாம் படத்த்துக்கான விளம்பர யுக்தியா எனக் கேட்டுள்ளனர். அதுமாதிரி எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. அதுமாதிரி பேசி படம் ஓடவேண்டும் என இல்லை. அப்பாவிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டது கஷ்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.