மனித நடமாட்டமில்லா ‘குணா’ குகையை கண்டுபிடித்தது எப்படி? – வைரலாகும் கமல்ஹாசன் பேட்டி!

மனித நடமாட்டமில்லா ‘குணா’ குகையை கண்டுபிடித்தது எப்படி? – வைரலாகும் கமல்ஹாசன் பேட்டி!

தற்போது “மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தினால் குணா குகை வைரலாகி வரும் நிலையில் அதற்கு அந்த பெயர் வந்த காரணம் பற்றி பார்ப்போம்.

இயக்குனர் சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1991ல் வெளியான படம் குணா. இந்த படத்தில் கமல்ஹாசனின் நடிப்பும், இளையராஜாவின் இசையும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களால் தொடர்ந்து புகழப்பட்டு வருகிறது. முக்கியமாக அதில் இடம்பெறும் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” பாடல் 2கே கிட்ஸ் வரை விருப்பப்பாடலாக உள்ளது.

தற்போது மலையாளத்தில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவான “மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தின் காரணமாக மீண்டும் குணா குகைகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. இந்த குகைக்கு குணா குகை என பெயர் வரக் காரணமே முதன்முதலில் மனித நடமாட்டமற்ற இந்த இடத்தை கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தியது கமல்ஹாசன் தான் என்பதால்தான்..

1991ல் குணா படம் வெளியானது தொட்டே அந்த குகை குறித்த பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன. பலரும் அந்த குகையை சுற்றிப்பார்க்க செல்ல அது ‘குணா’ குகை என்ற பெயரிலேயே சுற்றுலா தளமாக இப்போதும் உள்ளது. இதுகுறித்து அந்த சமயம் பேட்டி ஒன்றில் பேசியிருந்த கமல்ஹாசன் “கொடைக்கானலில் மனித நடமாட்டமே அற்ற ஒரு பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக சுற்றித் தேடிக்கொண்டிருந்தோம் நானும், சந்தானபாரதியும். சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சென்ற நாங்கள் இன்னும் ஒரு கிலோ மீட்டர் செல்வோமே என்று சென்றபோது அந்த குகை தென்பட்டது.

ஷூட்டிங்கிற்கு சரியான இடம் என்று அங்கேயே ஒரு சர்ச் செட்டும் அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம்” என்று கூறியுள்ளார். படப்பிடிப்புக்காக பலரும் பல சுற்றுலா லொக்கேஷன்களுக்கு செல்வார்கள். ஆனால் படப்பிடிப்பு நடத்திய பகுதி சுற்றுலா தளமான சம்பவம் குணா குகை விஷயத்தில் நடந்துள்ளது.