பிரதமர் மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..

இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின் போது, அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை மற்ற நிறுவனங்களுக்கும் தகவல் அளித்து இது குறித்து விசாரணையைத் தொடங்கியது.

உடனடியாக மிரட்டல் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, தில்லியில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக தீவிர சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு நேற்றிரவு சென்றடைந்தார்.

அங்கு தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு அமெரிக்கா பயணம் செய்யவுள்ளார். இந்த அழைப்பு குறித்து மும்பை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே நபர் இதுவரை 1,400 முறை மிரட்டல் விடுத்திருப்பதாக தெரியவந்தது. மேலும் அந்த நபர் யார் என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.